அன்பின் வெப்பம்

அதிருப்தியில் வழியும் கண்ணீரை
துடைத்துவிட எத்தனை கைகளும்
போதாது. அது மலையின் உச்சியில்
மௌன பூக்களின் புதர்களுக்கு இடையில்
சுரக்கும் நீர் ஊற்று போல ஆனது.
அது சுரக்கும், பெருக்கெடுக்கும், வழியும்
பின் அதுவே நிற்கும். அதுவரை காத்திருப்போம், அல்ல ஆதங்கத்தில் குமுறும் சொற்களை வெற்று உணர்ச்சிகளோடு எதிரில் இருப்பவரிடம் கத்தி தீர்ப்போம் அன்பே.
ஒரே வாக்கியம் தான். அது தொடங்கி
முடிந்து மீண்டும் தொடங்கும், அப்போது
நம் இருவரும் அருகில் இருந்தால் அல்ல
தூரங்களில் பிரிந்து வார்த்தைகளால்
இணைக்கப்பட்டு இருந்தால்
இருவரும் ஒருவரை ஒருவர்
கேட்டுக் கொள்வோம், எதுவும் பேசாமல்
ஒரு முறை இறுக அணைத்துக் கொள்வோமா
என்று!
இருவரையும் ஆற்றி தேற்றும் அன்பின்
வெப்பம் அப்போது இருவரையும்
வந்து சேர்ந்துவிடும் அல்லவா.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top